Saturday 19 September 2015

சிவபெருமானையே தூது அனுப்பி தெருவில் நடக்க வைத்தானா? -அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 8

நம்பியாரூரரை கண்டதும் அவரை உள்ளே அனுமதிக்காமல் கதவை சாத்தினாள் பரவை. நம்பியாரூரர் மனம் கலங்கி கோயிலுக்கு சென்று தன் நண்பரான சிவபெருமானிடம் முறையிட்டார். “நீ சங்கிலியை திருமணம் செய்து இருக்கக்கூடாது. செய்துவிட்டாய். இனி இதை பற்றி பேசியும் எந்த பயனும் இல்லை. சரி உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?”. என்றார் இறைவன். “எனக்காக பரவையிடம் சமாதானம் பேச வேண்டும்” என்றார் சுந்தரர். தன் நண்பனுக்காக மகேஸ்வரனே பரவையை சந்திக்க அவள் வீட்டுக்கு கோயில் அர்ச்சகர் உருவில் சென்றார். கதவை தட்டினார் அர்ச்சகர். “யாரது” என்றபடி கதவை திறந்தாள் பரவை. அர்ச்சகரை பார்த்து, “என்ன விஷயம்?” என்றாள். “சுந்தரர் விஷயமாக பேச வந்துள்ளேன்.” என்றார் இறைவன். பரவையாரின் முகம் கோபத்தில் சிவந்தது. வாயில் கதவை படார் என்று சாத்திவிட்டாள். நடந்த சம்பவத்தை சுந்தரரிடம் சொன்னார் சிவபெருமான். நம்பியாரூரர் விடுவதாக இல்லை.

“எனக்காக மறுபடியும் பேசுங்கள்.” என்றார். “காலையில் பார்க்கலாம் இப்போது அமைதியாக சென்று உறங்கு. எல்லாம் நல்லபடியாக நடக்கும்.” என்று சுந்தரரை சமாதானம் செய்தார் ஈசன். மறுநாள் காலை சிவபெருமான் பரவையார் வீட்டின் கதவை தட்டினார். கதவை திறந்து பார்த்த பரவை அதிர்ந்தாள். அவள் எதிரே சிவபெருமான். பரவை ஆனந்த கண்ணீருடன் இறைவனின் காலில் விழுந்து ஆசிப்பெற்றாள். பரவையாரின் முன் ஜென்ம சம்பவங்களை விவரித்தார் இறைவன். அனைத்தையும் உணர்ந்து சமாதானம் கொண்டாள். நேற்றும் வந்தது இறைவன் என்று அிறயாமல் பிழை செய்தேன். மன்னிக்க வேண்டும் என்று வேண்டினாள். மன்னித்தார் இறைவன். பரவையார் மனம் மாறி சுந்தரருடன் இணைந்தார். இந்த அற்புத செய்தி ஊர் முழுவதும் தெரிந்தது. அப்போது ஏயர்கோன் கலிகாமன் என்பவருக்கும் இந்த செய்தி கிடைத்தது. எல்லோரும் அற்புதம் என்று போற்றிய சம்பவம் பெரும் சிவபக்தரான அவருக்கு மட்டும் ஆத்திரத்தை உண்டாக்கியது. சுந்தரனுக்காக சிவபெருமானையே தூது அனுப்பி தெருவில் நடக்க வைத்தானா? அய்யோ… என்ன கொடுமை இது? எவன் அவன் சுந்தரன்.? என்று ஆத்திரத்துடன் கூறிவந்தார். அவரின் கோபம் சுந்தரருக்கு தெரிவிக்கப்பட்டது. நம்பியாரூரர் மிக வருந்தினார். ஏயர்கோன் கலிகாமரை சந்திக்க விரும்பினார். அதற்கு ஒருவழியை சிவபெருமானே உண்டாக்கினார். ஏயர்கோன் கலிகாமருக்கு கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தினார். துடித்து போனார் ஏயர்கோன்.

மருத்துவ மேதைகள் பலர் மருத்துவம் பார்த்தும் வயிற்று வலி தீரவில்லை. சிவபெருமானே இது என்ன சோதனை? என்று இறைவனின் முன்பாக கதறினார் ஏயர்கோன் கலிகாமர். அப்போது சிவபெருமான், அசரீரியாக “உனக்கு மருத்துவன் நம்பியாரூரன். அவன் மருந்து தந்தால் உன் நோய் தீரும்.” என்றார். அதற்கு ஏயர்கோன், “அய்யனே… தங்களை தூது அனுப்பி அவமானப்பட வைத்த சுந்தரனால் என் நோய் தீரும் என்றால் அப்படிபட்ட உயிர் இந்த உடலுக்கு தேவையில்லை.” என்றவாறு கத்தியால் தன்னை தானே குத்தி இறந்தார் ஏயர்கோன் கலிகாமர்.ஏயர்கோனின் பக்தியை எண்ணி மகிழ்ந்தார் சிவபெருமான். அச்சமயம் நம்பியாரூரர் ஏயர்கோனை சந்திக்க வந்திருந்தார். ஏயர்கோன் இறந்து போனார் என்று செய்தி கேட்டு கதறிய சுந்தரர் அவரின் உடலை தூக்கி தன் மடியில் வைத்து அழுதார். “ஒரு சிவபக்தன் உயிர் பிரிய நானே பெரும் காரணமானேனே… இனி நானும் உயிரோடிருந்து பயன் ஏது?“ என்றவாறு ஏயர்கோன் குத்தி இறந்த அதே கத்தியை எடுத்து தம் உயிரையும் மாய்த்துக்கொள்ள எண்ணினார் சுந்தரர். உடனே சிவபெருமான் அங்கு தோன்றி, சுந்தரரை தடுத்தார். ஏயர்கோன் கலிகாமருக்கும் உயிர் தந்தார். நம்பியாரூரரின் பெருமையை உணர்ந்தார் ஏயர்கோன். “என் உயிர் பிரிந்ததை கண்டு துடித்து உன் உயிரையும் இழக்க துணிந்தாயே…உனக்காக இறைவன் தூது சென்றது நியாயமே” என்று நம்பியாரூரரை போற்றி மகிழந்தார். சிறந்த சிவபக்தர்களான நம்பியாரூரரையும் ஏயர்கோன் கலிகாமரையும் பெரிய புராணம் சுந்தரமூர்த்தி நாயனார் எனவும் ஏயர்கோன் கலிகாம நாயனார் எனுவும் புகழ்ந்துரைக்கிறது.



No comments:

Post a Comment