Saturday 19 September 2015

தொண்டனுக்காக தலைநிமிர்ந்த இறைவன் அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 10

கும்பகோணத்துக்கு வடமேற்கு பதினான்கு மைல் தொலைவில் இருக்கிறது திருப்பனந்தாள் தாடகேச்சுரம் திருக்கோயில். பனைமரத்தின அடியில் இறைவன் தோன்றியதால் திருப்பனந்தாள் என்ற பெயர் ஏற்பட்டது. தாடகை என்னும் சிவபக்தைக்காக இறைவன் தன் கோயிலுக்கு தாடகேச்சுரம் என்கிற பெயரை கொண்டார். அந்த சம்பவத்தை அறிந்துக்கொள்வோம். இந்த திருப்பனந்தாள் ஆலயத்திற்கு தினமும் தாடகை என்கிற சிவபக்தை இறைவனுக்கு பூமாலை சாத்துவதை வழிபாடாக வைத்திருந்தாள். ஒருநாள் அவள் லிங்கத்திற்கு மாலை சாத்தும் போது அவள் முந்தானை நழுவியது. புடவையை சரி செய்ய பூமாலையை தரையில் வைத்தால் தோஷமாகிவிடுமோ என்ற கவலையில் இறைவனுக்கு மாலை சூட முடியாமல் தவித்தாள். அந்த பெண்ணின் சங்கடத்தை புரிந்து கொண்ட இறைவன், அவள் மாலை போடுவதற்கு ஏதுவாக தன் தலையை குனிந்துக் கொண்டு மலர் மாலையை ஏற்றுக்கொண்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த ஸ்தலத்தில் சாய்ந்த லிங்கம் நிமிரவே இல்லை.

பல வருடங்கள் கழித்து சோழ மன்னர், இந்த கோயிலில் சாய்ந்த சிவலிங்கத்தை நேராக நிறுத்தி வழிபட விரும்பி பலவிதமாக போராடினார். இரும்பு சங்கலியால் லிங்கத்தை கட்டி மறுமுனை யானையின் உடலில் இணைத்தும் இழுத்து பார்த்தார். யானைதான் சோர்வுற்று மயங்கி விழுந்ததே தவிர சிவலிங்கம் தலை நிமிரவில்லை. இதனால் மிகவும் மனவருத்தத்திற்கு ஆளானார் அரசர். இந்த செய்தியை குங்குலியக்கலய நாயனார் அறிந்து, மன்னரின் மனகவலையை தீர்க்க முதலில் திருக்கடவூர் ஈசனை வணங்கி, திருப்பனந்தாளுக்கு வந்து மன்னரை சந்தித்து, “நான் என் அப்பனான ஈசனின் லிங்கத்தை நிமிர்த்த முயற்சிக்கிறேன்.” என்றார். “யானையால் கூட இந்த லிங்கத்தை நிமிர்த்த முடியாமல் போராடி தோற்றது. உங்களால் எப்படி இயலும்.? முயற்சிப்பது வீண் வேலை. இந்த முயற்சியில் உங்களுக்கே ஏதேனும் விபரீதம் நடந்தால் என்ன செய்வது.? சாய்ந்த லிங்கம் சாய்ந்தே இருக்கட்டும்” என்றார் சோழ மன்னர். “எந்த விபரீதமும் நடக்காது அரசே. அப்படியே நடந்தாலும் எனக்கு அது இறைவன் கொடுத்த பரிசாகவே எண்ணுவேன்.” என்ற குங்குலியகலய நாயனார்,


கயிற்றால் ஒரு முனையை லிங்கத்தில் கட்டி மறுமுனையை தன் கையில் வைத்து இழுத்து பார்த்தார். லிங்கத்தில் எந்த அசைவும் இல்லை. சுற்றி இருந்த மக்களும், அரசரும் “ அய்யா…வேண்டாம் விட்டு விடுங்கள்” என்றார்கள். ஆனால் குங்குலியகலய நாயனார் கடைசி முயற்சியாக யாரும் எதிர்பாராத செயலை செய்தார். இதுவரை தன் கையால் லிங்கத்தை இழுத்த கயிற்றை தன் கழுத்தில் கட்டிக் கொண்டு லிங்கத்தை இழுத்தார். வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவர்கள் பதறினார்கள். உயிர் போனாலும் பரவாயில்லை என துணிந்த கலயநாயனாருக்காக சிவலிங்கமாக சாய்ந்திருந்த இறைவன் தலை நிமிர்ந்தான். சோழ மன்னரும் பக்தர்களும் குங்குலியகலய நாயனாரை போற்றி புகழ்ந்தார்கள். சில நாட்கள் திருப்பனந்தாள் ஆலயத்தில் இருந்து இறைவனுக்கு சேவை செய்துவிட்டு தன் சொந்த ஊரான திருக்கடவூருக்கு திரும்பி வந்து இறைவனை தரிசனம் செய்து தன் வீட்டுக்கு சென்றார் நாயனார். அப்போது கலயனாருக்காக திருபனந்தாள் தாடகேச்சுரம் இறைவன் மனம் இறங்கியதை கேள்விப்பட்டு திருஞானசம்பந்த சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் குங்குலியகலயனார் வீட்டுக்கு வந்து வாழ்த்தினார்கள். குங்குலியகலய நாயனார் பல ஆண்டுகள் சிவ ஸ்தலங்களுக்கும் சிவனடியார்களுக்கும் தன் சிவதொண்டை சிறப்பாக செய்து சிவபெருமானின் திருவடியில் முக்தியடைந்தார். நாம் அடுத்த பகுதியில் காண இருப்பது “சிறுத்தொண்ட நாயனார்” என்று சிறப்பாக அழைக்கப்படும் பரஞ்சோதியார் வரலாறு.


No comments:

Post a Comment